1 (அவளின் சீற்றம்)




இப்படி ஒரு நிலை அவள் வாழ்வில் வரும் என்று கனவில் கூட எண்ணியதில்லை அவள். யாரை காணக்கூடாதென்று நினைத்திருந்தாலோ அவனருகிலே மணமகளாய் அவள். அங்கே ஹோமகுண்டத்தில் எரியும் தீ அவள் உள்ளத்திலும் கொழுந்துவிட்டு எரிய கண்கள் நீரைச் சொரிந்தன. புரோகிதர் கரத்தை நீட்டுமாறு கூற சிலையாய் சமைந்திருந்தவளின் செவிகள் நன்கு வேலை செய்தாலும் அதை கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை என்பதாலோ என்னவோ அவளது மூளையின் சாம்பல் வண்ண செல்கள் கரங்களை உயர்த்து எனும் கட்டளையை அவளுக்கு இடவில்லை. 

ஆனால் அவளருகில் இருப்பவன் இதற்கெல்லாம் அசருபவன் இல்லை. இறுக்கமாக கரங்களை மூடியபடி இருந்தவளை ஒரு ஏளனப்புன்னகையுடன் அளவிட்டவன் தானே அவள் கரங்களைப் பற்றவும் அவள் தீச்சுட்டாற் போல கரங்களை வெடுக்கென இழுத்துக் கொண்டாள். அக்கணத்தில் அவன் முகத்தில் தோன்றிய சீற்றம் அவளை அச்சுறுத்த விருப்பமின்றி கடனே என தன் கரத்தை அவன் வசம் ஒப்படைத்தாள் அந்த ஆரணங்கு. 

கரத்தை அவன் வசம் ஒப்படைத்த சில நிமிடங்களில் அவள் வாழ்வும் தலையெழுத்தும் கூட அவன் வசம் ஒப்படைக்கப்பட்டன அவளது விருப்பமின்றி. மாங்கல்யம் கழுத்தில் ஏறியபோதும், நெற்றி வகிட்டில் குங்குமம் இடப்பட்ட போதும் உணர்ச்சியற்ற முகத்துடன் கல்லாய் அமர்ந்திருந்தவளை அவன் எழுப்பிவிட மெதுவாய் எழுந்தவளுக்கு தன் உலகமே இதோடு முடிந்து விட்டதை போன்ற உணர்வு. 

தன் கரத்தை வன்மையாய் சிறை பிடித்திருப்பவனது முகத்தை தலையுயர்த்திப் பார்த்தவளுக்கு அவன் முகத்தில் இருந்த வெற்றிப்புன்னகையும் கர்வமும் மட்டுமே மனதில் பதிந்தது. இவன் தன்னை எங்கே அழைத்துச் செல்கிறான் என்ற எண்ணம் தோன்றும் போதே அவளது கழுத்தில் மாங்கல்யத்தை பூட்டியவன் அந்த பங்களாவின் பணியாட்களுக்கு இன்றையிலிருந்து ஒரு மாத காலத்துக்கு விடுமுறை அளித்துவிட்டான். கூடவே திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் ஊதிய உயர்வும் அளிக்க வேலையாட்களுக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. 

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பிய பிறகு அந்த பெரிய மாளிகையில் அவனும் அவளும் மட்டுமே. அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக உடம்பில் சுரணை வர ஆரம்பித்தது. கூடவே இவனோடு தனிமையில் இருக்கும் நிலையை எண்ணி அச்சமும் வரவே தாறுமாறாக துடிக்கும் இதயத்தை அடக்கியபடி இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இழந்த தைரியத்தை மீட்க போராடினாள் அவள். 

அவளது தைரியமீட்பு போராட்டத்தை முகம் பிரதிபலிக்க அதை ஏளனம் கலந்த பார்வையுடன் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது வதனத்தில் தெரிந்த தோற்றுப் போன பாவம் ஒன்றே அவனுக்கு பரமதிருப்தியை அளித்தது. 

எங்கே சென்றது தொட்டதெற்கெல்லாம் எடுத்தெறிந்து தன்னை துச்சமாய் பேசுபவளின் வாய்த்துடுக்கு, அகராதி எல்லாம். இந்த முகத்தில் தன்னை காணும் போது உண்டாகும் திமிர், அகங்காரம் எல்லாம் இன்று துடைத்தெறியப்பட்டு கலக்கம் மட்டுமே உறைந்திருப்பது பார்ப்பதற்கு எவ்வளவு அழகு. 

அதே திருப்தியுடன் அவர்களின் திருமணத்துக்கு தயாரான விருந்தை ஒரு பிடி பிடித்தான் அவன். அவளோ இன்னும் சிலையாய் பெரிய அறையில் நடுவில் நிற்க அதன் பக்கவாட்டில் பரந்திருந்த டைனிங் ஹாலின் கண்ணாடி மேஜையில் அமர்ந்து சாப்பாட்டைச் சுவைத்து கொண்டிருந்தவனுக்கு அவளது பட்டினி ஒரு நொடி ஒரே ஒரு நொடி மனதை உறுத்தியது. 

பின்னர் இவள் தன்னை என்னவெல்லாம் பேசியிருப்பாள் என்ற எண்ணத்துடன் தோன்றிய சினத்தை அடக்கிக் கொண்டு தன் வேலையை முடித்தான். இன்று முழுவதும் பட்டினி கிடந்திருக்கிறான் அவளுக்காக. இரு வேளை உணவை தியாகம் செய்துவிட்டு திருமணம் முடிந்ததும் மாலை நேரத்தில் தான் அவன் வயிற்றுக்குள் உணவை அனுப்பினான். 

அவன் சாப்பிட்டு முடித்து எழுந்த பின்னர் மீதமிருந்த பணியாட்கள் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஹாலின் நடுவில் சிலையாய் நிற்பவளை எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்றான். வேக வேகமாய் உடைகளை களைந்தவன் ஷவரின் அடியில் நின்று கண்களை மூடிக்கொண்டான். 

மூடிய கண்களினூடே அவளது முகம் வந்து சென்றது. கூடவே "உன்னோட எண்ணம் எப்போவுமே நிறைவேறாது மிஸ்டர் சர்வா. உன்னோட பணத்திமிரால நீ எதை வேணா வாங்கலாம். ஆனா என்னை வாங்க முடியாது. உன்னோட முகத்த பாக்க கூட எனக்கு பிடிக்கல" என்ற வார்த்தையும். 

அதை கேட்டதும் இப்போது கூட அவனது கை நரம்புகள் துடிக்க குளியலறையின் சுவரில் கைகளை குத்தினான் சர்வா என்ற சர்வேஸ்வர். ஆந்திர மாநிலத்தின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவன். தாத்தா அப்பா என்று குடும்பவழியில் வந்த தொழிலை பல்கி பெருகச் செய்தவன். அவர்களின் முக்கியத்தொழிலான இரும்பு உருக்கு ஆலையை வெற்றிகரமாக நடத்தி வருபவன். இருபத்தியெட்டு வயதில் எட்டா உயரத்தில் உள்ள அனைத்தையும் எட்டிப் பறித்தவனுக்குக் காதல் மட்டும் எட்டாக்கனியாக இருக்க அதையும் தனது பணம் மற்றும் ஆள்பலத்தால் அடைந்த அவனது குணமே அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்பதை ஊருக்கு உணர்த்தும். 

ஷவரை நிறுத்திவிட்டு டிசர்ட்டை மாட்டிக் கொண்டவன் மனையாளைத் தேடி ஹாலுக்கு வந்தான். அவனது மனைவி இன்னும் சிலை போல நின்று கொண்டிருப்பதை கண்ணுற்றவன் குரலில் கர்வம் மின்ன 

"மிசஸ் சர்வேஸ்வர் இன்னும் ஏன் இங்க நிக்கிற? நம்ம ரூம் மாடில இருக்கு பேப். போய் குளிச்சு ஃப்ரெஷ் ஆகலாமே" என்றபடி அழுத்தமான காலடிகளுடன் அவளருகில் வர அந்த பெண்ணின் உடல் அவள் அறியாது நடுங்க தொடங்கியது. 

அவள் பயத்தில் எச்சிலை விழுங்குவது கூட அவன் கண்ணிலிருந்து தப்பவில்லை. 

"த்ச்சு!! ரொம்ப பயமா இருக்குதா பேபி? யாரும் இல்லாத வீடு. நீயும் நானும் மட்டும் தனியா இருக்கிறப்போ பயம் வரது இயற்கை தான். வரணும் வந்தே ஆகணும். வெறும் திமிரையும் ஆணவத்தையும் மட்டும் நான் பாத்த இந்த கண்ணுல முதல் முறையா நான் பயத்தை பாக்கணும்னு நெனைக்கிறேன். அந்த நிமிசத்துக்காக தான் இத்தன நாள் காத்திருந்து காய் நகர்த்தி உன்னை என் பேலஸ்குள்ள கொண்டு வந்தேன். என்னை இந்த சர்வேஸ்வரை நீ என்ன சொன்ன? பணத்திமிர் பிடிச்சராட்சசன், ஆம் ஐ ரைட்? ராட்சசனோட பொண்டாட்டி கூட ராட்சசி தான். தெரியுமா?" 

அவன் இவ்வார்த்தையை சொன்ன பொழுது அவளின் விழிகள் இறுக மூடிக்கொள்ள கரங்கள் இறுக்கமாக புடவையைப் பற்றிக் கொண்டது. மூடியவிழிகளின் வழியே வழிந்த கண்ணீர் கன்னம் தொட்டு கழுத்தைக் கடந்து புடவையை நனைக்கத் தொடங்கியது. சர்வாவின் பார்வை அவளது இறுகிய கரங்களைப் பார்த்துவிட்டு முகத்துக்கு முன்னேறியது. 

இன்னும் அவன் மனதில் மிச்சமிருந்த காதல் அவளது கண்ணீரை காண முடியாது தவிக்க ஒரே எட்டில் அவளை அடைந்து இடையோடு சேர்த்து அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன் உதடுகள் அவள் இதழைத் தேட அதற்குள் சுதாரித்த அவள் அவனை தன்னிடமிருந்து விலக்கித் தள்ள முயல அந்த ஆறடி ஆண்மகனின் எஃகு தேகம் இம்மியளவு கூட அசையவில்லை. 

"ஒரு விபசாரிய கூட விருப்பமில்லாம தொடக்கூடாதுனு நினைக்கிறவன் தான் உண்மையான ஆண்மகன். நீ எப்பிடிப்பட்டவன் சர்வா?" என்று இம்முறை பயத்தை விழுங்கிவிட்டு பழைய தைரியத்தை வரவழைத்தபடி கேட்டவளை மெச்சுதலாய் ஒரு முறை பார்த்தவனின் கண்ணில் ஒளி கூடியது. 

"யா! பட் நீ என் பொண்டாட்டி. உன்னை தொடுறதுக்கு லீகலா எனக்கு பெர்மிட் இருக்கு பேப். அக்னிசாட்சியா கல்யாணம் பண்ணுனவன் கிட்ட இப்பிடியெல்லாம் டயலாக் பேசலாமா என் பத்தினி தெய்வமே?" என்று நக்கல் தொனியுடன் கேட்டவனின் முகம் இறுக்கமாய் மாறவும் அவளுக்கு உள்ளுக்குள் அச்சம் பிறந்தது. 

அந்த அச்சத்தை கண்டுகொண்டபடி அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தவன் அவளது இதழ் நோக்கி குனிய அதற்குள் அவள் அவசரமாய் திரும்பியதில் அவளது கன்னங்களில் மோதி நின்றது அவன் இதழ். கன்னத்தில் உராய்ந்த அவனது இதழ்கள் அவளுக்கு தீக்கங்கால் சூடிழுத்தது போல இருக்க இன்னும் நன்றாக திரும்பியதில் அவளது செவிமடல்கள் தான் அவனுக்கு பரிசாய் கிடைத்தது. 

அதில் அவனது மீசையும் மூன்று நாள் தாடியும் உராய "சஹா!! சனா!! மை பேப் சஹானா!! சஹானா ராகத்தை கேக்கிற எவ்வளவு பெரிய கோவக்காரனும் பொறுமைசாலியா மாறிடுவானாம். ஆனா என் முன்னாடி நிக்கிற இந்த சஹானா என்னை இன்னும் கோவக்காரனா தான் மாத்துறா. ஏன் என்னை என்னோட காதலை புரிஞ்சிக்க உனக்கு மனசு வரல சஹானா?" என்று முணுமுணுத்தவனின் வார்த்தைகள் அவளுள் சீற்றத்தை உண்டு பண்ணியது. 

சீற்றத்தில் அவளது மூச்சுக்காற்று கூட அவனைச் சுட்டுப்பொசுக்கும் அனலாய் மாற இப்பொழுதும் அவளது கரங்கள் தன்னை வளைத்திருக்கும் அந்த அசுரனை தள்ள முயன்றது. இம்முறை அவளது அருகாமையிலும் மென்மையிலும் தன்னை தொலைத்திருந்தவனின் தேகம் இளகி இருக்க அதை உபயோகித்துக் கொண்ட சஹானா தன்னிடமிருந்து அவனை விலக்கித் தள்ளினாள். 

கண்ணில் கோபம் மின்ன "உன்னோட சுண்டு விரல் என் மேல பட்டுச்சுனா கூட நான் உன்ன சும்மா விடமாட்டேன் சர்வா. என் குடும்பத்தை மிரட்டி என்னை தனியாள் ஆக்கிருக்கலாம். என்னோட இருந்தவங்கள காசு குடுத்து விலைக்கு வாங்கிருக்கலாம். என்னை கடத்தி இந்த பங்களால அடைச்சுருக்கலாம். என்னோட விருப்பம் இல்லாம என்னை கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா என் விருப்பம் இருந்தா மட்டும் தான் நீ என்னை தொட முடியும்" என்று ஆவேசத்துடன் உரைத்தவளை கையைக் கட்டிக் கொண்டு பார்த்தபடி நின்றான் சர்வேஸ்வர். 

"உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் இந்த சஹானாவ உன்னால தொட முடியாது. மனைவினு சொல்லிட்டு அத்துமீற நினைச்சேனா நான் உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன்" என்று சபதம் இட்டுவிட்டு மூச்சு வாங்க நின்றாள் சஹானா என்ற அப்பெண், நம் நாயகி. 

இதை கேட்ட சர்வேஸ்வர் பொய்யாக ஆச்சரியப்பட்டுவிட்டு கரங்களை தட்டி அவளை பாராட்டியபடியே "இவ்வளவு நேரம் நீ பொம்மை மாதிரி அமைதியா நின்னது பார்த்து எனக்கு போரடிச்சுது பேப். இப்போ தான் கேம் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்குது. பாக்கலாம் நீயா நானானு. நீ பிடிவாதக்காரினா நான் நினைச்சத முடிக்கிறவன். இது வரைக்கும் எனக்கு பிடிச்சத அடைய நடத்துன எந்த போராட்டத்திலயும் நான் தோத்ததே இல்ல. இதுலயும் நான் தோக்க மாட்டேன்" என்று சவால் விட்டான். 

அவனது சவாலில் தேகம் விரைக்க நின்ற சஹானா "இனி நீ என்னை எதை சொல்லி பயமுறுத்துவ சர்வா? இனி நீ பிளாக்மெயில் பண்ணுறதுக்கு எதுவுமே இல்ல. நீ கட்டாயம் இந்த முறை தோத்து தான் போவ" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயன்றவளின் புடவை எதிலோ சிக்குண்டிருக்க திரும்பி பார்த்தவளுக்கு அதை இறுக்கமாக பற்றியபடி நின்றிருந்த சர்வாவை கண்டதும் கோபத்தில் நாசி விடைக்க ஆரம்பித்தது. 

அவனோ அவளது சீற்றத்தில் சிவந்த முகத்தை ரசித்தபடி அவள் அருகில் வந்து நின்று அவளை குழந்தை போல தூக்கி கொள்ள சஹானா அவன் மார்பில் அடிக்க தொடங்கினாள். அந்த இரும்பு தேகத்தை அடித்து அவள் கைகள் தான் வலிக்க தொடங்கியது. சர்வா அவளது போராட்டத்தை ரசித்தபடி அவளது வெற்றிடையில் கைகளை அழுத்த சஹானா திமிறியவள் இறங்க முயன்று தோற்றாள். அவளது முகத்தை அருகில் பார்த்தபடி "இது வெறும் சாம்பிள் தான் பேப். இன்னும் ட்ரெய்லர் மெயின் பிக்சர் பாத்தேனா நீ மெரண்டு போயிடுவ. அப்புறம் குட் கேர்ளா சர்வாவோட சஹானாவா மாறிடுவ. நான் உன்னை மாத்தி காட்டுவேன் சனா" என்றவனின் தீவிரக்குரலிலும் அவளது சீற்றம் குறையவில்லை.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8