அத்தியாயம் 13
செங்குட்டுவன் வைதீஸ்வரனின் வீட்டைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். புங்கைவனத்துக்குச் செல்லும் முன்னர் புகழ்வேந்தன் அவரது நடவடிக்கைகளைக் கவனிக்குமாறு பணித்துவிட்டு போயிருந்தான். எனவே கடந்த மூன்று வாரங்களாக அலுவலகப்பணியுடன் இதையும் செய்து வருகிறான் செங்குட்டுவன்.
வைதீஸ்வரனுக்கும் மீனாட்சியின் குடும்பத்திற்கும் நெருக்கமான ஒருவர் மீனாட்சியின் மரணத்துக்கு வைதீஸ்வரனும் தமயந்தியும்தான் காரணமென கூறியதால் இந்த கூடுதல் கவனிப்பு.
செங்குட்டுவன் வீட்டுக்குள் அனுப்பி வைத்திருந்த ஆட்கள் வைதீஸ்வரனுக்கும் ஆழினிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவனிடம் உடனுக்குடன் சொல்லிவிட்டார்கள். அதை வைதீஸ்வரனிடம் பகிர்ந்தவன்
“ஆழினி மேடம் அங்க வந்துடுவாங்களோனு டென்சன்ல அந்தாளு ஊரை காலி செய்றதா சொல்லிருக்கிறார். உங்களை நெனைச்சு பயப்படுறதால மட்டும் இப்படி செய்யல சார். உண்மை தெரிஞ்சதுனால பயந்து ஓடுறார்னு தோணுது” என்றான்.
“அந்தாளு வீட்டு மதில் சுவரை தாண்டக்கூடாது. மீறி தாண்டுனா பொணமாதான் தாண்டனும்”
இதுவே புகழ்வேந்தன் கொடுத்த கட்டளை. செங்குட்டுவனும் சில பவுன்சர்களோடு வந்து நின்றான். வைதீஸ்வரனும் தமயந்தியும் குண்டோதரர்களாய் வந்து நின்ற பவுன்சர்களை பார்த்ததும் அலறினார்கள்.
“இந்த வீட்டுப்படிய நீங்க தாண்டக்கூடாது. இது எங்க பாசோட உத்தரவு. அதை மீறனும்னு நெனைக்கிறவங்க உயிரோட வெளிய போகமுடியாது”
வைதீஸ்வரனும் தமயந்தியும் பெட்டி படுக்கைகளை ஹாலில் போட்டுவிட்டு அரண்டு போய் அவர்களுடைய ரூமுக்கு ஓடிவிட்டார்கள்.
செங்குட்டுவன் பவுன்சர்களின் தலைவனிடம் “இவங்க வீட்டை தாண்டக்கூடாது” என்று கட்டளையிட்டுவிட்டு புகழ்வேந்தனிடம் தகவலைக் கூறிவிட்டான்.
புங்கைவனத்திலோ புகழ்வேந்தனின் குடும்பத்தார் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருந்தனர்.
அவர்களுக்குப் பரிசாக பட்டாடைகள், ஆபரணங்கள் மற்றும் இனிப்புகள் தனி காரில் ஏற்றப்பட்டன.
புகழ்வேந்தன் அவனது பாசத்துக்குரிய குதிரை சூர்யாவின் நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்றான்.
எழில்வேந்தன் அண்ணன் மகனிடம் “அடுத்த தடவை உன் வாரிசு நம் அரண்மனையில தவழனும். மருமகளை நல்லபடியா பார்த்துக்க புகழ்” என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
ராஜேஸ்வரியும் ஈஸ்வரியும் ஆழினிக்கு அறிவுரைகள் கூறி வழியனுப்பினர்.
குமுதினியும் பர்வதமும் இன்னும் சில நாட்கள் அங்கே தங்கிவிட்டு வருவதாக கூறிவிட தம்பதி மட்டும் ஊருக்குத் திரும்பினார்கள்.
ஆழினிக்கு சென்னையின் சூழல் மூச்சைடப்பை உண்டாக்கியது. புங்கைவனத்தில் இருந்த சுதந்திரம் அங்கே இருக்காது என்பதால் கூட இருக்கலாம்.
வீட்டுக்குத் திரும்பியதும் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமென்பதால் கிளம்பிவிட்டான் புகழ்வேந்தன்.
ஆழினிக்கு பர்வதமும் குமுதினியும் இல்லாத தனிமை மருட்டியது.
எனவே அப்பாவை பார்த்துவிட்டு வரலாமென கிளம்பியவள் வீட்டை அடைந்ததும் அங்கே புதிதாக தெரிந்த பவுன்சர்கள் திகைப்பைக் கொடுத்தனர்.
“இங்க என்ன பண்றிங்க?” யார் நீங்க?” என்றவளிடம்
“வேந்தன் சார் எங்களை செக்யூரிட்டிக்காக அனுப்பி வச்சிருக்கிறார் மேடம்” என்றனர் பவுன்சர்கள்.
திடீரென என்ன பாதுகாப்பு என ஆழினி யோசிக்கும்போதே தமயந்தி வந்தார். வந்தவர் ஆழினியிடம் நைச்சியமாக பேசி தனது அறைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார்.
“மாப்ளை வரலீயா கண்ணு?”
“இல்ல சித்தி”
மனதிற்குள் என் அன்னையைக் கொன்றவரா இவர் என்ற கேள்வி உறுத்தினாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பதிலளித்தாள் ஆழினி.
“எதும் விசேசமா ஆழி?”
சந்தேகமாக கேட்ட தமயந்திக்கோ அப்படி எதுவும் இருந்துவிடக்கூடாதென்ற எண்ணம்.
“இல்ல சித்தி. உங்களை பார்க்கணும் போலிருந்ததால வந்தேன். அப்பா எங்க சித்தி? ஆபிசுக்கு போயிருக்கீறாரா?”
தமயந்தி கண்ணீரே வராத பொழுதும் போலியாக துடைத்துகொண்டு “ஆபிச் அதிகாரம் எல்லாம் மாப்ளை கைவசம் போயாச்சே கண்ணு. உன் அப்பா அவரோட அறையில இருக்கிறார். பாவம் மனுசன் ரொம்ப உடைஞ்சி போயிட்டார்” என்றதும் அவருக்கென்னவாயிற்று என விசாரித்தாள்.
தமயந்தியோ “அப்பாக்கு மூச்சிளைப்பு இருக்கு ஆழி. டாக்டர்ட்ட போனோம். அவர் மலைவாசஸ்தலத்தில ஓய்வெடுக்க சொல்லியிருக்கீறார். நேற்று பயண ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டு கெளம்பினோம். அப்போ மாப்ளையுடய பி.ஏ ஒருத்தன் இருக்கிறானே அவன் தடியனுங்களோட வந்து எங்களை வீட்டுச்சிறையில வச்சிருக்கிறான் ஆழி. மாப்ளை தான் இப்படி செய்ய சொன்னதா வேற பேசுறான். நம் மாப்ளை பற்றி எனக்குத் தெரியாதா? இவனும் தடியனுங்களும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்டிருக்காங்க கண்ணு. மாப்ளைட்ட சொல்லி நீ தான் என்னையும் உன் அப்பாவையும் காப்பாற்றணும்” என்று கரம் கூப்பினார்.
ஆழினிக்கோ யாருடைய வார்த்தைகளை நம்புவதென்றே தெரியவில்லை. ஒரே குழப்பம்.
சித்தியின் கரத்தைப் பற்றியவள் “கவலைப்படாதீங்க. நான் வேந்தன்ட்ட பேசுறேன். “ என்று உறுதிகொடுத்துவிட்டு கிளம்பினாள்.
வாயில் வரை வந்தவள் காரை ஸ்டார்ட் செய்தபொழுதுதான் போனை தமயந்தியின் ரூமில் வைத்துவிட்டு வந்தது நியாபகம் வந்தது.
பவுன்சர்களில் ஒருவனை அழைத்தவள் “காரை வெளிய கொண்டு போங்க. நான் மொபைலை எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தாள்.
அவள் அழைக்கவில்லை என்றாலும் பவுன்சர்களீல் ஒருவன் துணையாக தமயந்தியின் அறைக்கு ஆழினியோடு வந்தான்.
ஆழினியோ “எதுக்கு?” என்க, “வேந்தன் சார் கட்டளை மேடம்” என பதில் கிடைத்தது.
அரவம் எழுப்பாமல் கதவில் கை வைத்தவள் உள்ளே இருந்து கேட்ட குரலில் அதிர்ந்து போனாள். காரணம் அவளது தந்தையும் சிற்றன்னையும் பேசிக்கொண்டிருந்த சமாசாரம் அப்படிப்பட்டது.
“அக்கா போன கையோட இந்த கழுதைய கொன்னுருந்தா இப்படி நடந்திருக்குமா?” கண்ணு ஆழி என குழையும் தமயந்தியின் குரலே.
“ச்சூ! சத்தமா பேசாதே தமயா. நான் மட்டும் இவளை கல்யாணம் கட்ட வேந்தன் மாதிரி ஒரு வில்லன் வருவான்று கனவா கண்டேன்? அவன் நம் சொத்து முழுதையும் முழுங்குனதோட மீனாட்சிய நீயும் நானும் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்னதையும் கண்டுபிடிச்சிட்டான். அவன் நம்மை உயிருடன் விட்டு வச்சதே பெரிசு. இனி ஆழினி இங்கே வந்தா வாசலோட அனுப்பி வச்சிடு”
அவள் மீதே உயிராக இருந்த தந்தையின் கொடூர முகம் வெளியே வரவும் உடைந்து போனாள் ஆழினி.
உயிரற்றவளாக கதவைத் தட்டினாள். வேகமாக கதவை திறந்த தமயந்தியும் உள்ளே பதட்டத்துடன் அமர்ந்திருந்த வைதீஸ்வரனும் வியர்த்து வழிந்தனர்.
“என் போன்”
தமயந்தி ஓடி போய் எடுத்து கொடுத்தார்.
ஆழினிக்கு அதற்கு மேல் அவர்கள் முகத்தில் விழிக்க விருப்பமில்லை. கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறியவள் விபத்தாகாமல் வீடு வந்து சேர்ந்தது மீனாட்சி என்றோ செய்த புண்ணியமே.
வீட்டுக்கு வந்தவள் சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு கொறித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.
கண்ணீர் நிற்காமல் பொங்கியது. புகழ்வேந்தன் சொன்னது போல வைதீஸ்வரனும் தமயந்தியும் கொலைகாரப்பாவிகள். இத்தனை ஆண்டுகள் தன்னை ஏமாற்றியிருக்கிறார்கள். புகழ்வேந்தன் விவகாரத்தில் நகைத்திருடன் என அவனைப் பொய் சொல்லி சிறையில் அடிவாங்க வைத்திருக்கிறார்கள். அதற்கு தன் பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படி பொய்த்து போனார்களே. இந்த ஜென்மத்தில் எனக்கு எந்த உறவும் உண்மையாக இருக்காதா கடவுளே? ஆழினி அரற்றினாள்.
ஆனால் பாவம், அவர்கள் அவளது பெயரை பயன்படுத்தி இன்னொரு மாபெரும் அநீதியை புகழ்வேந்தனின் குடும்பத்திற்கு செய்தது அந்தப் பேதைப்பெண்ணுக்குத் தெரியவில்லை.
எவ்வளவு நேரம் அரற்றினாளோ, அப்படியே உறங்கிவிட்டாள். வேலையாட்கள் வந்து அவளது அறைவிளக்கை போட்டுவிட்டு வீட்டில் விளக்கேற்றியது கூட அறியாதளவுக்கு ஆழ்ந்த உறக்கம்.
புகழ்வேந்தன் வீட்டுக்கு திரும்பியவன் மனைவி துயிலில் ஆழ்ந்திருப்பதை கண்டதும் அமைதியாக டீசர்ட் ட்ராக் பேண்டுக்கு மாறினான்.
அவள் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டு திரும்பிய தகவல் அவனுக்கு ஏற்கெனவே வந்துவிட்டது. என்ன காரணம் என்று கூட தகவல் வந்திருந்தது. இருப்பினும் ஆழ்ந்து உறங்குமளவுக்கு என்ன நேர்ந்திருக்கும்?
வேலையாள் காபி கொண்டு வர அதை வாங்கிக்கொண்டவன் கதவை மூடினான்.
மனைவியை எழுப்ப ஆரம்பித்தான். ஆழினி மனச்சுமையுடன் உறங்கியவள் புகழ்வேந்தனின் உலுக்கலால் எழுந்து அமர்ந்தாள்.
“ஆழினிதேவி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்திங்க. என்ன நடந்தது உன் அப்பன் வீட்டுல?”
இவ்வளவு நேரம் இருந்த மன அழுத்தத்தை அவனது ஏளனப்பேச்சு இன்னும் அதிகரிக்கவும் ஆழினிக்கு கோபம் வந்துவிட்டது.
“எல்லாம் தெரிஞ்சும் தெரியாத போல கேட்கிறிங்க. இன்னிக்கு என் அப்... வைதீஸ்வரனும் தமயந்தியும் என் அம்மாவை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செஞ்சதா பேசுனதை என் காதால் கேட்டேன். உங்களுக்கும் அது தெரிஞ்சிருக்கும்ல. ஏன் அவங்களை சும்மா விட்டிங்க?”
மனம் வேதனையில் சுருங்க கத்தினாள் ஆழினி.
“நான் ஏன் அவங்களூக்கு தண்டனை கொடுக்கனும்? உன் அம்மா இறந்ததுக்கு நான் ஏன் அவங்களுக்கு தண்டனை கொடுக்கனும் ஆழினி தேவி?”
ஆழினிக்கு பதில் பேச வரவில்லை. அவனே அவளை பழி வாங்க மணந்தவன். அவளுடைய அன்னைக்கு என்னவானால் அவனுக்கென்ன? சொல்லப்போனால் இத்தகவல் ஆழினிக்கு தாங்கவொண்ணா துன்பத்தைக் கொடுப்பதை அறிந்து குதூகலிக்க வேண்டுமானால் செய்வானே தவிர அவன் ஏன் வைதீஸ்வரனையும் தமயந்தியையும் பழிவாங்க போகிறான்?
கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் ஆழினி.
“நீங்க தண்டனை கொடுக்கவேண்டாம். என் அம்மாக்கு நடந்த அநியாயத்திற்கு நானே பழிவாங்குவேன்” என தீர்மானித்தாள்.
அவளது அன்னை மீனாட்சியின் குடும்பத்திற்கு வேண்டியவர்கள் பட்டியலில் இமயனின் குடும்பமும் அடக்கம். புகழ்வேந்தனால் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவன் ஓரளவுக்கு உடல் தேறியிருப்பான். அவனது தந்தையிடம் உதவி கேட்க வேண்டுமென தீர்மானித்தாள்.
அதை புகழ்வேந்தனிடம் மறைக்க எண்ணியவள் எதுவும் பேசாமல் மீண்டும் படுத்துக்கொண்டாள்.
புகழ்வேந்தனுக்கு அவள் சோர்ந்து படுத்திருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கவும் எழுப்பி அமர வைத்தான்.
“நீ பழிவாங்குறதால இறந்த உன் அம்மா திரும்பி வரப்போறதில்லை ஆழினி” என்றான் மென்மையாக.
ஆழினியோ “அதை நீங்க சொல்றப்ப சிரிப்பு வருது வேந்தன். பழி வாங்க மட்டுமே என்னை பொய் சொல்லி மணந்தவர் நீங்க. சாத்தான் வேதம் ஓதுற போல இருக்கு. இறந்தவங்க என் அம்மா. அவங்களை கொன்னவங்களை நான் பழி தீர்த்தே ஆகனும். இல்லனா என்னால நிம்மதியா இருக்க முடியாது” என்றாள்.
“பழி வாங்குற ஜோருல மாத்திரை போட மறந்துடாதே ஹனி. நீ மறக்க மாட்ட. புங்கை வனம் போறப்ப கூட மாத்திரையை கையோட கொண்டு போனவளாயிற்றே”
புகழ்வேந்தன் இவ்வாறு சொன்னதும் ஆழினியின் முகத்திலிருந்த விரக்தி மறைந்து போனது. விவரிக்க முடியாத உணர்வொன்று அவளின் முகத்தில்.
“சாப்பிட மறந்தாலும் மாத்திரை போட மறக்கமாட்டேன். போதுமா?”
“குட். தட்ஸ் மை கேர்ள்”
சொன்னதோடு நிறுத்தாமல் கன்னத்தில் ‘இச்’ வைத்தான் அவன்.
அது ‘இச்’சோடு நிற்காது என்பதால் விலக்க துணிந்தாள் ஆழினி.
ஆனால் காமத்துக்கும் காதலுக்கும் காலநேரமேது? மாறன் விடுத்த கணை பாய்ந்த நொடியில் உள்ளுக்குள் பிரவாகமெடுத்து ஓடும் உன்னத உணர்வுகள் நரம்புகளை அதிர வைக்கும்போது உடலும் மனமும் அதிர்வைக் குறைக்க நேசிப்பவரை தேட தானே செய்யும்.
புகழ்வேந்தனின் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் ஆழினி தேவைப்பட்டாள் அக்கணம். அவளுக்கும் அன்றைய தினத்தின் வேதனையை அவனது தோள் வளைவில் அடங்கி, அணைப்பில் ஒடுங்கி தீர்த்துக்கொண்டால் போதுமென்ற நிலை
ஆழினியின் வருத்தத்தை போக்கி தீர வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இருந்ததே. கட்டில் பாடத்தால் தீராத கவலை அவனியில் உண்டா என்ன?
ஆடைகள் விடை பெற்ற ஆணவனின் படிக்கட்டுத்தேகத்தின் வனப்பில் பெண்மயில் மயங்க, மயங்கிய நொடியில் தயக்கமின்றி அவளை படுக்கையில் சரித்து துச்சாதனனின் கடமையை ஆற்றியவன் ஆழினியின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் முத்த ஒற்றடம் கொடுத்தான்.
இதழ்களின் இச் சத்தமும், மெல்லிய முனகல்களும் அந்த அறைய ஆக்கிரமித்தன.
உடலின் மென்பாகங்களில் ஆதிக்கத்தை செலுத்தியவன் கடல் தேடிய கங்கையாய் அவளுடன் கலந்து சங்கமித்தான்.
ஆண்மையை ஏற்றுக்கொண்ட பெண்மை சிவந்து நாணி முயங்கி மலர்ந்தது மஞ்சத்தில்.
அவனது தேக்கு மர தேகத்தில் பற்றி படரும் கொடியாய் மாறிப்போனவளை விட மனமில்லை மன்னவனுக்கு.
கொவ்வை செவ்விதழ்களில் அருந்திய காதல் ரசம் மீண்டும் சுவைக்கும் வெறியை ஏற்றியது. மலர் இதழ்களின் குவியலாய் தெரிந்த பெண்ணவளோ என்னை அணைத்துக்கொள் என்று சொல்லாமல் சொன்னாள்.
இனியும் விடுவானா வேந்தன்? ஆழினியை ஆழத் தொடங்கினான் காதலோடு. பெண்மகள் அவனது வார்த்தையை மதியாமல் செய்த காரியத்தின் விளைவு தெரியவரும்பொழுது இதே காதல் அவனிடம் இருக்குமா? ஆழினியின் நிலையை புரிந்துகொள்ளுவானா?
ஆழி எப்ப வரும்
ReplyDelete